Saturday, 13 August 2011

பர்மிங்ஹாம் டெஸ்ட்: இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்

பர்மிங்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இந்தியா போராடி வருகிறது.

இந்திய- இங்கிலாந்துக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதைத்தொடர்ந்து, ஆடிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், அந்த அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 710 ரன்கள் குவித்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

அந்த அணியின் துவக்க வீரர் அலிஸ்டர் குக் அபாரமாக ஆடி 294 ரன்களை குவித்தார். ஆனால், வெறும் 6 ரன்களில் அவர் முச்சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.

இதைத்தொடர்ந்து, 486 இலக்குகள் எடுத்தால் மட்டுமே இங்கிலாந்து ஸ்கோரை சமன் செய்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இரண்டாவது இன்னிங்சை இந்தியா ஆடத்துவங்கியது.

இந்த இன்னிங்சிலாவது ஆபத்பாந்தவன் பெயரை காப்பாற்றுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க வீரர் சேவாக் மீண்டும் ஏமாற்றினார். ஆம். இரண்டாவது இன்னிங்சிலும் ரன் ஏதும் எடு்க்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார் சேவாக்.

ஒரே இன்னிங்சில் இரட்டை முட்டை போட்ட பேட்ஸ்மேன் என்ற பெருமையுடன் பெவிலியனுக்கு நடையை கட்டினார். இதனால், இந்தியாவுக்கு நெருக்கடி அதிகரித்து இக்கட்டான நிலையில் தத்தளிக்கிறது.

நேற்று மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்களை எடுத்திருந்தது. டிராவிட் 18 ரன்களுடனும், கம்பீர் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் எஞ்சி இருக்கும் நிலையில், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை சமன் செய்வதற்கு இன்னும் 451 ரன்களை எடுக்க வேண்டிய நிலையில் இருப்பதால், மூன்றாவது டெஸ்டிலும் இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

No comments:

Post a Comment